ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்

2

புதுடில்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸெட்டை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.,) காலவரையற்ற விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொண்டது. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸெட். இவர் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநராக பணிபுரிந்து வந்தார். இவர் நடத்தும் ஒரு அறக்கட்டளைக்கு பணம் வசூலிக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

தற்போது, ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸெட்டை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.,) காலவரையற்ற விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வாஸெட் விடுப்பில் இருப்பார் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கும் மின்னஞ்சலை அனுப்பி உள்ளார்.



அவருக்குப் பதிலாக உலக சுகாதார நிறுவனம் உதவி இயக்குநர் ஜெனரல் கேத்தரினா போஹ்மே நியமிக்கப்படுவார். இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு, ஷேக் ஹசீனா தனது மகளுக்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவோ அல்லது வங்கதேசமோ பதில் அளிக்கவில்லை. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரானவர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement