பா. ரஞ்சித் படப்பிடிப்பில் விபத்து: ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு

நாகை: இயக்குநர் பா. ரஞ்சித் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



தங்கலான் படத்தை தொடர்ந்து தற்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங், கடந்த 10ம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் நடந்து வருகிறது.


கீழையூர் அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில் உள்ள பகுதியில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (52) என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.


இந் நிலையில், இன்று(ஜூலை 13) படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது காட்சி ஒன்றில் காரில் இருந்து மோகன்ராஜ் குதிப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது காரில் இருந்து மோகன்ராஜ் கீழே குதித்துள்ளார். அப்போது தவறி விழுந்ததில் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.


இதையடுத்து, அவரை படக்குழுவினர் மீட்டு, உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வேட்டுவம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Advertisement