சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பலி

பொதட்டூர்பேட்டை:சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன், கழுத்து இறுகியதில் மூச்சு திணறி உயிரிழந்தார்.

பொதட்டூர்பேட்டை அடுத்த கீழ்நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் கிரண், 14. இவர், திருத்தணி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, இவரது பெற்றோர் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர்.

வீட்டில் கிரண் மற்றும் அவரது சகோதரி மட்டுமே இருந்தனர். அப்போது கிரண், வீட்டு முற்றத்தில் தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, ஊஞ்சல் கட்டியிருந்த சேலை, கிரணின் கழுத்தில் இறுகி கொண்டது. கிரண் திணறுவதை பார்த்த சகோதரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிரணை மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால், ஏற்கனவே கிரண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement