தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு

5


மேட்டுப்பாளையம்: ''தமிழகத்தில் முதல்வர் மற்றும் முதல்வர் மகனை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி தான் நடக்கிறது. தி.மு.க., ஆட்சி தூக்கி ஏறியப்பட வேண்டும்,'' என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 4 ஆண்டுகளாக தி.மு.க., அரசாங்கம் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளது. சொத்து வரி, மின் கட்டணம், பத்திரபதிவு கட்டணம் போன்றவைகள் உயர்வு என மக்கள் தலையில் பெரிய பாரத்தை தி.மு.க., அரசு சுமத்தியுள்ளது.


தம்பிகளின் ஆட்சி



தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன் செல்வோர் மீதே தாக்குதல் நடக்கிறது. உதாரணத்திற்கு திருத்தணி அருகே கர்ப்பிணி பெண் புகார் கொடுக்க சென்ற போது, அவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் போலீசார் விசாரணை என்ற பெயரில் 24 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன. காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் செயல் அற்று உள்ளார். தமிழகத்தில் முதல்வர் மற்றும் முதல்வர் மகனை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி தான் நடக்கிறது.


ஆன்மிக பூமி




முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் ஆன்மிக பூமி என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற யாத்திரை இ.பி.எஸ்., தலைமையில் நடைபெற்றது. இது தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புகின்ற யாத்திரையாக இருக்கும்.
சமூக நீதி விடுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

வெற்று விளம்பரங்கள்




முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மத்திய பிரதேசத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., விடுதிகள் எப்படி உள்ளது என பார்த்துவிட்டு, அதே போல் நல்ல வசதிகள் கொண்ட விடுதிகளை இங்கு உருவாக்க வேண்டும். தி.மு.க., அரசு வெற்று விளம்பரங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழக கிராமங்களில் கஞ்சா, மதுபழக்கம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் 20 முதல் 25 இளம் விதவைகள் உள்ளனர்.

தி.மு.க., அரசாங்கம் தூக்கி ஏறியப்பட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. நடிகர் விஜய் நேற்று தான் முதல் முறையாக வெளியே வந்து 3 நிமிடம் பேசியிருக்கிறார். அவரது செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சில நிதிகளை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி உள்ளது.

தேசிய கல்வி கொள்கை




தாய் மொழியை ஊக்குவிக்கும் தேசிய கல்வி கொள்கைகளின் ஒரு பகுதியாக பி.எம். ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்தில் துவங்குவதற்கு தி.மு.க., அரசு டில்லியில் கையெழுத்து போட்டுவிட்டு, இங்கு வந்து மாற்றிக்கொள்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை நடவடிக்கையை ஒத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களை வஞ்சிப்பதற்காக தி.மு.க., அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு 11 வருடங்களாக வளர்ச்சி நிதிகள் ரூ.11 லட்சம் கோடி வரை வழங்கியுள்ளது.


விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், விவசாயிகளுக்கு என பல்வேறு தரப்பினருக்கும், பல்வேறு திட்டங்களுக்கும் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. 3 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. திருக்குறளை 85 மொழிகளில், மொழி பெயர்த்து உள்ளோம்.செஞ்சி கோட்டையை உலக பாரம்பரியச் சின்னமாக யுனஸ்கோ அறிவிப்புக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பது தி.மு.க.,வின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்துவது என்பது 12 ஆண்டுகள், 13 ஆண்டுகள் ஆன கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது நடைமுறையில் உள்ளது ஒன்று தான். புதிதாக கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் நடத்தவில்லை.


தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழகத்தின் தலைவர் இ.பி.எஸ்., தான். தி.மு.க., கூட்டணியில் இருந்து மா.கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைதள் எப்போது வாய்ப்பு கிடைக்கும் வெளியே வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் கொடுப்பாரா?



மேட்டுப்பாளையத்தில் புறநகர் சாலை அமைக்கவும், போக்குவரத்து இடையூறுகளை சீர் செய்யவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நானே நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement