போலி நன்கொடை விலக்குகள்: நாட்டின் பல்வேறு நகரங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு

1

புதுடில்லி:போலியாக அரசியல் நன்கொடை, மருத்துவம் மற்றும் கல்விக் கட்டண விலக்குகள் தொடர்பாக வருமான வரித்துறை இன்று பல நகரங்களில் திடீர் சோதனைகளை தொடங்கியது.

இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி.ஜி.சி., , பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது தேர்தல் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு தனிநபர்கள் விலக்குகளைப் பெற அனுமதிக்கிறது. இருப்பினும், சில வரி செலுத்துவோர் இந்தப் பிரிவின் கீழ் தவறான விலக்குகளைக் கோர போலி பில்களையும் பதிவு செய்யப்படாத கட்சிகளையும் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

அதன்படி, தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் கீழ் 200க்கும் மேற்பட்ட இடங்கள் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.

ரிட்டன் தாக்கல் செய்பவர்கள், கணக்காளர்கள் மற்றும் பிற இடை தரகர்கள் தனி நபர்கள் வரிகளைத் தவிர்க்க உதவும் வகையில் போலி ஆவணங்களைத் தயாரிப்பதாக சந்தேகம் உள்ளது.


பல வரி செலுத்துவோர், துல்லியமான வருமான வரி வருமானங்களை தாக்கல் செய்யவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தினோம். வரும் நாட்களில் சோதனை தொடரும்.

இவ்வாறு வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement