ரயில்வே துறை சீரழிவுக்கு தனி பட்ஜெட் ரத்துதான் காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: 'ரயில்வே துறை சீரழிவுக்கு தனி பட்ஜெட்டை ரத்து செய்ததே காரணம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

ஜூலை 13ம் தேதி அதிகாலை, திருவள்ளூர் அருகே டீசல் கொண்டுச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்துள்ளது. இதற்கு நாச வேலை காரணமோ என்ற, கேள்வி எழுகிறது. இந்த தீ விபத்தால், பல முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பலரின் பயணங்கள் தடைபட்டுள்ளன.

தமிழக அமைச்சர் நாசர் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை வேறிடத்தில் தங்கவைத்து, உணவு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது மட்டுமே ஆறுதலாக உள்ளது. இதுபோன்ற ரயில் விபத்துகள் அடிக்கடி நடக்க, இருப்பு பாதைகள், உயர் அழுத்த மின் கம்பிகள் முறையாக பராமரிக்கப்படாததும், ரயில்வே அதிகாரிகளின் அலட்சியமும்தான் காரணம்.

ரயில்வே துறைக்கு என, தனி பட்ஜெட் போடாமல், பொது பட்ஜெட்டில் கொண்டு வந்தபோதே, அனைத்து முக்கிய வேலைகளிலும் பெருந்தடை ஏற்பட்டது. அப்போதே சீர்கேடு துவங்கி விட்டது. பல ஆண்டுகளாகவே, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ரயில்வே 'கேட் கீப்பர்' பணியிடங்களில், மாநில மொழி தெரியாதவர்களை நியமித்துள்ளனர்.

எனவே, ரயில்வே துறைக்கு மீண்டும் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும். எரிபொருள்களை கொண்டு போகும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement