அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆக.16ல் தொடர் காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம்:அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22ல் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம், ஆக., 16 மண்டல அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகிறது. இதனை கண்டித்து நேற்று பஸ் ஸ்டாண்ட், பணிமனைகள் முன் பிரசார இயக்கம் நடந்தது. இதில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அரசு கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் உள்ள 22 மண்டல அலுவலகங்கள் முன் குடும்பத்துடன் தர்ணா நடத்தவும், ஆக.,16 மண்டல அலுவலகங்கள் முன் போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யூ., மத்திய சங்க மண்டல தலைவர் தெய்வீரபாண்டியன் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 23 மாதங்களாக வழங்கப்படாத பணப்பலன்களை வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வருவதுடன் வாரிசு வேலை பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பின் படி வாரிசு பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பணியில் இருக்கும் தொழிலாளர்களும், ஓய்வூதியர்களும் பங்கேற்பார்கள் என்றார்.

Advertisement