5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

1

பாட்னா: அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது உட்பட, 30 பரிந்துரைகளுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான பீஹார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்ட சபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்ட்சிகள் பீஹாரில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 13ம் தேதி சமூகவலைதளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், 'கடந்த 2005 முதல் 2020 வரையிலான காலத்தில் 8 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் நேற்று புதிய அறிவிப்புகளை நிதிஷ் அரசு வெளியிட்டுள்ளது. 2025 முதல் 2030 வரையிலான அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட 30 முக்கிய பரிந்துரைகளுக்கு நிதிஷ் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

Advertisement