காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை

2

சென்னை: ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:



தமிழகத்தை 'ஸ்ட்ராங்' ஆக்கிய, காமராஜர் சிலைக்கு மாலை போட சென்றால், படி பலவீனமாக உள்ளது. தமிழக அரசு உடனடியாக, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள படி, மேடை, ஆகியவற்றை பலப்படுத்த வேண்டும்.


'உங்களுடன் ஸ்டாலின்' என்கின்றனர். இதுவரை யாருடன் இருந்தார் எனத் தெரியவில்லை. பிரச்னைகளுடன் ஸ்டாலின் உள்ளார்.



அரசு ஏதோ அவசரத்தன்மையில், அச்சத்தில் உள்ளது. மக்கள் வீதியில் போராடுகின்றனர். அரசு வீடு தேடி செல்கிறது. அரசு குழப்பத்தில் உள்ளது. மக்கள் துன்பத்தில் உள்ளனர்.


'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு திட்டங்கள் செல்ல வேண்டும் என, பிரதமர் நடத்திய திட்டத்தின் ஸ்டிக்கரே, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்.


நான்கரை ஆண்டுகளில் செய்ய முடியாததை, 45 நாளில் எப்படி செய்யப் போகிறீர்கள். அரசு அதிகாரிகளை பிரசாரம் செய்பவர்களாக மாற்றி விட்டனர். தி.மு.க.,வில் பிரசாரம் செய்ய ஆள் இல்லை. உள்ளே ஒரே பிரச்னை.


இந்தியாவில் உள்ள 55 பல்கலைகள், உலக அரங்கில் முன்னணி பல்கலைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதற்கு, தேசிய கல்விக் கொள்கைதான் காரணம்.


பணம் செலுத்தி விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தி படிக்கலாம். ஏழைகள் இலவசமாக படிக்க, மும்மொழி கிடையாது. ஹிந்தி திணிப்பதாக தவறான கருத்தை பரப்புகின்றனர்.


தனியார் பள்ளிகளில் படிப்பு எப்படி உள்ளது. அரசு பள்ளிகளில் எப்படி உள்ளது. வேற்றுமையுடன் கல்வியை கற்று தருகின்றனர்.


கல்வியில் விளையாடுவதை, முதலில் அரசு நிறுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு சார்பில் விளம்பரம் மட்டும் நடக்கிறது. திருவள்ளுவர் எங்களுக்கும் சொந்தம்தான். அவரின் புனிதத்தன்மையை, மறைக்க பார்க்கின்றனர். நாங்கள் வெளிக் கொண்டு வருவோம்.


தமிழுக்கு ஆன்மிகம் எதிரி கிடையாது. காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை. காவி தமிழ்; காவிய தமிழ் என்பதை வலியுறுத்துவோம்.


மாணவர்களை 'ப' வடிவில் அமர வைத்தால் மட்டும் பாகுபாடு மறையாது. சுழற்சி முறையில் குழந்தைகளை அமர வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement