செக்போஸ்டில் சோதனை ரூ.95,000 பறிமுதல்

காட்பாடி:ஆந்திரா - தமிழக எல்லையில் இரு மாநில வாகன போக்குவரத்தை கண்காணித்து ஆய்வு செய்ய, வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.

அதன்படி, வேலுார் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு அங்கு சோதனை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர். முடிவில் கணக்கில் வராத, 95,000 ரூபாய் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவிலிருந்து வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

அதிகாலை, 3:00 மணிக்கு தொடங்கிய சோதனை, காலை 7:-30 மணிக்கு முடிவடைந்தது.

Advertisement