தி.மு.க., நிர்வாகி திறந்த கடை கூட்டுறவு செயலர் பணி நீக்கம்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே தி.மு.க., ஒன்றிய செயலரை வைத்து, பகுதி நேர ரேஷன் கடையை திறந்தது தொடர்பாக, ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் புதுாரில், புதிய பகுதி நேர ரேஷன் கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ரேஷன் கடை, ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்டது.

கடை திறப்பின் போது மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை. அதே சமயம் விதிகளை மீறி தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் எஸ்.எம்.டி., கல்யாணசுந்தரம் அழைக்கப்பட்டு, அவர் ரிப்பன் கட் செய்து கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

'ரேஷன் கடை வருவதற்கு நான் தான் காரணம்' என, மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் போனில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட ஜடையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் பட்டுலிங்கத்தை தற்காலிக பணி நீக்கம் செய்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement