நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்:நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 420 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் வழக்கம் போல் இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டினர்.

கைதுக்கு பயந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக் கொண்டு ராமேஸ்வரம் கரை நோக்கி திரும்பினர்.

இதன் பின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்த மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி பலரும் தொழில் நஷ்டத்துடன் நேற்று காலை கரை திரும்பினர்.

'இதில் 100க்கும் மேற்பட்ட படகில் மீன்கள் இன்றி ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது.

இனி வரும் நாட்களில் இலங்கை கடற்படை கெடுபிடி தொடர்ந்து நீடித்தால் இப்பகுதியில் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் கேரளாவுக்கு வேலை தேடிச் செல்லும் சூழல் உருவாகும்' என தெரிவித்தனர்.

Advertisement