குருவாயூர் - -மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:குருவாயூர் -- மதுரை வழித்தடத்தில் இயங்கும் ரயிலை போடி வரை தடநீட்டிப்பு செய்ய வேண்டும் என தென் மாவட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் இருந்து தினமும் காலை 11:35 மணிக்கு புறப்பட்டு இரவு 2:10 மணிக்கு குருவாயூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து தினமும் அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 7:10 மணிக்கு மதுரை வருகிறது. இதனால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள், கேரள மாநில பயணிகள் அதிகம் பயனடைந்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட்டுகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மூணாறு செல்ல ரயில்கள் வசதி இல்லை. இதனால் நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி நகரங்களில் இருந்து புறப்படும் அரசு பஸ்கள் மூலம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், பேரையூர், உசிலம்பட்டி, தேனி சென்று அங்கிருந்து மூணாறு செல்கின்றனர்.

இந்நிலையில் குருவாயூரில் அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணிக்கு மதுரை வரும் ரயிலை இரவு 8:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு போடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மறு மார்க்கத்தில் போடியில் இருந்து தினமும் காலை 9:00 மணிக்கு புறப்பட்டு 10:45 மணிக்கு மதுரை வந்து அங்கிருந்து வழக்கம் போல் காலை 11:35 மணிக்கு குருவாயூர் செல்லும் வகையில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதன் மூலம் தென் மாவட்ட மக்கள் மூணாறு செல்ல ரயில் வசதி கிடைக்கும். போடி, தேனி மக்களுக்கு கூடுதல் ரயில் சேவையும் கிடைக்கும். தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement