மணல் பிரச்னையால் கொலை நடக்கவில்லை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

1

கரூர்:''கரூர் வாங்கலில், மணல் பிரச்னையால் கொலை நடக்கவில்லை; அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றன,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட செங்குந்தபுரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த, இரண்டு நாட்களில், 5,067 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 2,244 பேர் மனு அளித்துள்ளனர். மக்கள், தங்களின் கோரிக்கைகளை உரிய ஆவணங்களோடு சமர்ப்பித்தால், உடனடியாக தீர்வு காணப்படும். 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில், கரூர் மாவட்டத்திற்கு, மூன்று லட்சம் பேர் தான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை தாண்டி இதுவரை, 4.50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரூர், வெண்ணைமலை கோவில் இடப்பிரச்னையில், ஐந்து வகையான நிலங்கள் உள்ளன. இதில், இரண்டு வகையான நிலங்களில், மக்களுக்கு பட்டா வழங்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் விரைவில் நல்ல தீர்வு காணப்படும். கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், வாங்கல் பகுதியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்டவர் மனைவியின் புகார் அடிப்படையில், வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல் பிரச்னையால் கொலை சம்பவம் நடக்கவில்லை என, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement