சோளம் பதுக்குவோர் பாடு இனி திண்டாட்டம் தான்!

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளில் சோள உற்பத்தியை அதிகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், நாளுக்கு நாள் கால்நடைகளுக்கான தீவனங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையை போக்கவே அம்மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சோளம் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அம்மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா, ''ஆண்டுக்கு நான்கு முறை சோளம் அறுவடை செய்யப்படுகிறது. ஆனாலும், பதப்படுத்தும் ஆலைகளின் பற்றாக்குறையால், கால்நடைகளுக்கு தீவனம் வழங்க முடியாமல் திண்டாடி வருகிறோம்.

''இதனால் பதப்படுத்துவதற்கு அண்டை மாநிலங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. எனவே தொழில்முனைவோரும், ஆலை உரிமையாளர்களும், இந்த துறையில் முதலீடு செய்வதற்கு முன் வரவேண்டும். இதன் வாயிலாக அதிக அளவில் சோளத்தை மகசூல் செய்வதற்கு விவசாயிகளும் முன்வருவர். மேலும் அவர்களுக்கும் நிரந்தரமான வருவாய் கிடைக்கும்,'' என்றார்.

சோள உற்பத்தியை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை எடுத்து வருவதால், அதை பதுக்குவோர் பாடு இனி திண்டாட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement