'சிறையில் எனக்கு என்ன நேர்ந்தாலும் ராணுவ தளபதி மூனீர் தான் பொறுப்பு'

1

இஸ்லாமாபாத்: சிறையில் தான் மோசமாக நடத்தப்படுவதாக கூறியுள்ள பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'தனக்கு ஏதாவது நேர்ந்தால் ராணுவ தளபதியே காரணம்' என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக தெஹ்ரிக்- - இ - -இன்சாப் கட்சியின் தலைவரும், பாக்., முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று பரிசுப்பொருள் முறைகேடு வழக்கில், இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபியும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இருவரும் சிறையில் துன்புறுத்தப்படுவதாக இம்ரான் கான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“சமீப நாட்களில், சிறையில் மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்கிறேன். என் மனைவிக்கும் இது பொருந்தும். அவரது அறையில் உள்ள தொலைக்காட்சி கூட அகற்றப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் கைதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் என அனைத்து அடிப்படை உரிமைகளும் எங்கள் இருவருக்கும் நிறுத்தப்பட்டுள்ளன,” என அவரது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீர் உத்தரவின் பேரில், ஒரு கர்னலும் சிறை கண்காணிப்பாளரும் மோசமாக நடந்து கொள்வதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.எஸ்.ஐ., தலைவர் பதவியில் இருந்து அசிம் முனீர் நீக்கப்பட்டபோது, அவரை புஷ்ரா பீபி சந்திக்க மறுத்துவிட்டதால், தற்போது பழிவாங்குவதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

எனவே, சிறையில் தனக்கு ஏதாவது நேர்ந்தால், அசிம் முனீர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று இம்ரான் கான் பதிவிட்டுள்ளார்.

இம்ரான் கானை விடுவிக்கக்கோரி, பி.டி.ஐ., கட்சியினர் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement