மேம்படுத்தப்பட்ட முன்பதிவு வசதி 'வந்தே பாரத்' ரயில்களுக்கு அறிமுகம்

1

சென்னை: 'வந்தே பாரத்' ரயில்களில், 'மேம்படுத்தப்பட்ட நடப்பு முன்பதிவு வசதி' அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், உடனுக்குடன் காலி டிக்கெட் நிலவரம் பெற்று, பயணியர் முன்பதிவு செய்யலாம்.

தெற்கு ரயில்வேயில் தற்போது, 11 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற விரைவு ரயில்களை விட வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால், பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை, காலி இடங்கள் இருந்தால், அவற்றில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இதற்கிடையே, ரயில்களில் காலியாக உள்ள இருக்கைகளின் விபரங்களை, பயணியர் உடனுக்குடன் தெரிந்து கொள்ள, 'மேம்படுத்தப்பட்ட நடப்பு முன்பதிவு வசதி' ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டது.

இதற்காக, கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் முடிந்துள்ளதால், முதல் கட்டமாக, வந்தே பாரத் ரயில்களில் இவ்வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில், மேம்படுத்தப்பட்ட நடப்பு முன்பதிவு முறை, எழும்பூர் -- நாகர்கோவில்; நாகர்கோவில் -- எழும்பூர்; கோவை - கர்நாடகா மாநிலம் பெங்களூரு கன்டோன்மென்ட்; கர்நாடக மாநிலம் மங்களூரு - கேரள மாநிலம் திருவனந்தபுரம்; சென்னை -- ஆந்திர மாநிலம் விஜயவாடா உட்பட எட்டு வந்தே பாரத் ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, வழித்தட நிலையங்களில், வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் வரை, ஆன்லைன் வழியாகவும், டிக்கெட் கவுன்டரிலும், நடப்பு முன்பதிவு செய்யலாம்.

ரயில் ஒவ்வொரு நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவும், காலி டிக்கெட் நிலவரம் பெற்று, பயணியர் முன்பதிவு செய்யலாம். முதல் கட்டமாக, இந்த வசதி வந்தே பாரத் ரயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற விரைவு ரயில்களிலும், இந்த வசதி படிப்படியாக கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement