மதுரை விமான நிலைய விரிவாக்க பணி தொய்வு: தமிழக அரசு நடவடிக்கைக்கு காங்., எம்.பி., வேண்டுகோள்

அவனியாபுரம்: ''மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் தொய்வடைந்துள்ளன. விரிவாக்கம் தொடர்பாக பலமுறை தமிழக அரசை வலியுறுத்தி விட்டோம். மத்திய அரசும் ஏதாவது காரணத்தை கூறி விமான நிலைய வளர்ச்சியை முடக்க பார்க்கிறார்கள்,'' என திருநகரில் விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., எம்.பி., சிவா கூறிய கருத்திற்கு அவரே வருத்தம் தெரிவித்து விட்டார். வருத்தம் தெரிவித்ததால் இந்த விஷயம் முடிகிறது.

பா.ஜ, வின் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆக., 9ல் டில்லியில் இண்டியா கூட்டணியின் கூட்டம் நடக்கிறது. அக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு காங்., தலைவர் ராகுல் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் தொய்வடைந்துள்ளன. விரிவாக்கம் தொடர்பாக பலமுறை தமிழக அரசை வலியுறுத்தி விட்டோம். முன்னாள் கலெக்டர் சங்கீதா இதுகுறித்த அறிக்கையை சென்னைக்கு அனுப்பியிருப்பதாக கூறினார். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசு ஏதாவது ஒரு காரணத்தை கூறி விமான நிலைய வளர்ச்சியை முடக்க பார்க்கிறார்கள். ஏற்கனவே சிங்கப்பூர் விமானத்தை நிறுத்தி விட்டார்கள்.

அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிரமாண்டமான கட்சி, தங்களுடன் இணைய உள்ளதாக கூறி வருகிறார். பிரமாண்டம் என்ற பெயருடன் யாராவது புதிய கட்சி ஆரம்பிக்கிறார்களா என பார்ப்போம். அப்படி யாராவது கட்சி ஆரம்பித்து அவர்களுடன் கூட்டணியில் சேரலாம். அமித்ஷா அ.தி.மு.க.,வாக மாறிவிட்ட கட்சியில் ஏற்கனவே பழனிசாமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. இருக்கிற அதிகாரத்தையும் பறிப்பதற்காக முன்னாள் அமைச்சர் வேலுமணி போன்றவர்கள் சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement