'சுந்தரா டிராவல்ஸ்' பஸ்கள் மாற்றம் அமைச்சர் சிவசங்கர் கிண்டல்

அரியலுார் : ''பழனிசாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பஸ்களுக்கு பதிலாக, தற்போது புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன,'' என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலுார் மாவட்டம் செந்துறையில், அவர் அளித்த பேட்டி:



அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள் என, 3,200 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்து தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ளது.


பழனிசாமி முதல்வராக இருந்த போது, புதிய பஸ்கள் வாங்காத காரணத்தால் தான் பழைய பஸ்கள் ஓடின.



தற்போது, பழனிசாமி ஓட்டக்கூடிய சுந்தரா டிராவல்ஸ் பஸ்சுக்கு எப்படி அவர் ஓனரோ, அதேபோல் ஏற்கனவே ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பஸ்களுக்கும் அவரே ஓனர்.


அந்த சுந்தரா டிராவல்ஸ் பஸ்சை மாற்றுவதற்காகவே, முதல்வர் ஸ்டாலின்நடவடிக்கை எடுத்து, 11,000 புதிய பஸ்கள் வாங்க அனுமதி வழங்கி, 4,500 பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன; 15 ஆண்டுகள் ஓடிய பஸ்கள் அகற்றப்பட்டு, இந்த புதிய பஸ்கள் ஓடுகின்றன.


'ஓரணியில் தமிழகம்' வாயிலாக, இதுவரை 1 கோடியே 35 லட்சம் பேர், தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டுள்ளனர். முதல்வருடைய நல்லாட்சிக்கு சான்றாக நாங்கள் போகும் இடத்தில் வரவேற்பு அளித்து, அவர்களே தி.மு.க.,வில் இணைகின்றனர்.


தமிழகத்தின் பிரமாண்ட கட்சி ஒன்று கூட்டணி சேர வருவதாக பழனிசாமி சொல்கிறார். அப்படியென்றால், அ.தி.மு.க.,வை விட பெரிய கட்சி என எதை சொல்கிறார் என தெரியவில்லை.


இப்படி, அ.தி.மு.க., வையே கேவலப்படுத்தும் ஒரு தலைவர் தான், அக்கட்சிக்கு பொதுச்செயலராக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement