'மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ரூ.3.40 லட்சம் கோடியை தாண்டியது'

ஹைதராபாத்:இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 40 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, கிட்டத்தட்ட 3.40 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி., ஹைதராபாதின் 14 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் தெரிவித்ததாவது:

நம் நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தி, கடந்த 11 ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களே பொறாமைப்படக் கூடிய அளவுக்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. அதே போல, ஏற்றுமதி எட்டு மடங்கு அதிகரித்து 3.40 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. வெகு சில நாடுகளே இவ்வளவு மின்னணு பொருள் ஏற்றுமதியை எட்டியுள்ளன.

நடப்பாண்டுக்குள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப், வணிக ரீதியான பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செமிகண்டக்டர் தயாரிப்புக்கு தேவையான மூலதன பாகங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே, செமிகண்டக்டர் தயாரிப்பில், உலகின் முன்னணி ஐந்து நாடுகளில் விரைவில் இந்தியாவும் இடம்பெறும். மேலும், வரும் 2027ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, நாட்டின் முதல் புல்லட் ரயிலும் ஓடத் துவங்கிவிடும்.

இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement