விபத்தில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிய அமைச்சர்

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே ரோடு விபத்தில் காயம் அடைந்த சிறுமியை அந்த வழியாக வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பாரதி மகால் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் கவி ஸ்ரீ 11, 6 ம் வகுப்பு படிக்கிறார். நேற்று மதியம் 12:30 மணிக்கு தன் வீட்டு எதிரே உள்ள குழாயில் தண்ணீர் வருகிறதா என பார்ப்பதற்கு திருச்சுழி ரோட்டை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டூ வீலர் சிறுமி மீது மோதியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த வழியாக செம்பட்டி பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அந்த வழியாக வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மக்கள் கூட்டமாக இருப்பதைப் பார்த்து கீழே இறங்கி, காயமடைந்த சிறுமியை உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

Advertisement