ஸ்ரீவில்லி., ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு நேற்று காலை, 7:00 மணிக்கு மாட வீதிகளை சுற்றி கொடி பட்டம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கொடிமரத்தின் முன் சிறப்பு பூஜை நடந்து காலை, 7:40 மணிக்கு பரத்வாஜ் பட்டர் கொடியேற்றினார். ஏராளமான பக்தர்கள் ஆண்டாள், ரங்கமன்னாரை தரிசித்தனர். ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலாராஜா, அறங்காவலர் நளாயினி, அறநிலையத்துறை அலுவலர்கள், பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். நேற்றிரவு, 10:00 மணிக்கு மேல், 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரங்க மன்னார் வீதியுலா எழுந்தருளினர். விழா நாட்களில் காலை ஆண்டாள், ரங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடக்கும்.
ஜூலை, 24 காலை, 10:00 மணிக்கு ஆடிப்பூரப்பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு, 10:00 மணிக்கு, ஐந்து கருட சேவையும், ஜூலை, 26 இரவு, 7:00 மணிக்கு மேல் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள், ரங்கமன்னார் சயனத் திருக்கோல உற்ஸவமும் நடக்கிறது.
முக்கிய திருவிழாவான ஆண்டாள் தேரோட்டம், ஜூலை, 28 காலை, 9:10 மணிக்கு நடக்கிறது. ஜூலை, 31 மாலை, 6:00 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூர விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், பட்டர்கள் செய்துள்ளனர். கொடியேற்றத்தின் போது, கோவில் கொடி மரத்தை சுற்றி தர்ப்பைபுல் கட்டி, சந்தனம் வைப்பதில் தங்களுக்கு தான் உரிமை உள்ளது எனக்கூறி கோவில் பட்டர்கள், பரிசாரகர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் கண்டித்தார். பின் வழக்கம்போல் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும்
-
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
-
தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி., யார்? சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி