திருப்பதியில் அடுத்தடுத்து விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு; அவசர அவசரமாக தரையிறக்கம்

2


திருப்பதி: திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மீண்டும் தரையிறக்கப்பட்ட சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர்.

நேற்றிரவு (ஜூலை 20) திருப்பதி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ 6இ 6591 விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு இருப்பது நடுவானில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மீண்டும் திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, விமானம் சுமார் 40 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. இதனால், பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதேபோல, நேற்று காலை 6.19 மணிக்கு திருப்பதியில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட மற்றொரு இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வானில் வட்டமடித்தபடி, மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்ட இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, அடுத்தடுத்து விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement