இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு 

புதுச்சேரி: இன்ஸ்பெக்டர் மீது பெண் அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்த பெண் ஒருவர், காவல் துறை உளவு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் மீது, தன்னை திருமணம் செய்து 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, நகை மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார்.

இன்ஸ்பெக்டருடன் குடும்பம் நடத்தியபோது, எனது மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ததால், அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கை தனது அதிகாரத்தால் திசை திருப்பி விட்டார்.

இதற்கு, இன்ஸ்பெக்டரின் தம்பியும் உடந்தையாக இருந்தார். இதனால், தற்போது, எனது கணவர், குழந்தைகளை பிரிந்து நிற்கதியில் இருக்கிறேன்.

ஆகையால், தன்னை திருமணம் செய்த ஏமாற்றியதோடு, மகளை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., அலுவலகத்தில், அப்பெண் புகார் அளித்தார்.

இதையடுத்து, டி.ஜி.பி., ஷாலினிசிங், அந்த புகார் மீது விசாரணை நடத்த உளவு பிரிவு எஸ்.பி., பழனிவேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையில் பெண் கூறிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

Advertisement