போலீசார் என்னை துன்புறுத்தவில்லை கோர்ட்டில் குண்டுவெடிப்பு கைதி பதில்

6

கோவை : கோவை குண்டுவெடிப்பு கைதி, ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின் போது போலீசார் துன்புறுத்தவில்லை என்று, மாஜிஸ்திரேட்டிடம் கூறினார்.


கோவையில், 1998, பிப்.,14 ல், பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 58 பேர் கொல்லப்பட்டனர். வழக்கு தொடர்பாக, 156 பேர் கைது செய்யப்பட்டனர்.




கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 42 பேருக்கு ஆயுள் சிறை, 106 பேருக்கு, ஏழு ஆண்டுக்கு மேற்பட்ட சிறை தண்டனை அளிக்கப்பட்டது.



வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான், டெய்லர் ராஜா,51, ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.



கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் வசித்து வந்த டெய்லர் ராஜாவை, 28 ஆண்டுக்கு பிறகு, கடந்த 11 ம் தேதி, தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.



அவரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, மனு தாக்கல் செய்தனர். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு, மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெர்ஸ்டா முன்னிலையில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

'போலீஸ் காவலில் விசாரித்த போது துன்பறுத்தினார்களா, சாப்பாடு முறையாக கொடுத்தார்களா' என மாஜிஸ்திரேட் கேட்டார். இதற்கு, 'போலீசார் துன்புறுத்தவில்லை ; முறையாக சாப்பாடு கொடுத்தார்கள்' என்று டெய்லர் ராஜா பதிலளித்தார்.




இதையடுத்து, வரும் 24ம் தேதி வரை , நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement