கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளாதீங்க! அரசுக்கு விசைத்தறியாளர் வேண்டுகோள்

3

பல்லடம்: 'நாமக்கல்லில் நடந்ததை போன்று, கிட்னியை விற்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிட வேண்டாம்' என, விசைத்தறிஉரிமையாளர்கள், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:


திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.




கொரோனா காலத்தில் இருந்தே தொழில் அழிவு பாதையை நோக்கி சென்று வருகிறது. நவீன தறிகள் அதிகரித்ததால், விசைத்தறிகளின் உற்பத்தி குறைந்து, தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது.



விசைத்தறியாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படுவதால், குடும்பம் நடத்த இயலாமல், வாங்கிய கடன்களை அடக்க, உடலின் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கிட்னியை விற்கும் அவலம் ஏற்படுகிறது.



நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் நடந்துள்ள சம்பவம், விசைத்தறி தொழில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.



விசைத்தறியாளர்களுக்கு முழு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தால் மட்டுமே தொழிலை காப்பாற்ற முடியும்.



விசைத்தறிகளுக்கான தனி ரக ஒதுக்கீடு, அரசு பணியாளர்களுக்கான சீருடைகள் தயாரித்தல், மஞ்சள் பை திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தினால் தான் விசைத்தறி தொழில் மேம்படும்.

நீண்ட காலமாக கேட்கப்பட்டு வரும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்படுத்தினால் தான், விசைத்தறி தொழிலை பாதுகாக்க முடியும்.




விசைத்தறியாளர்களை, கிட்னியை விற்கும் அவல நிலைக்கு தள்ளிவிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement