தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு' மக்களுக்கு ஓ.டி.பி., அனுப்ப தடை

மதுரை : தி.மு.க.,வினர், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் மக்களிடம் ஆதார் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க தடை கோரிய வழக்கில், 'ஓ.டி.பி., எண் விபரங்களை மக்களிடம் சேகரிக்கக்கூடாது' என, இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உறுப்பினர் சேர்க்கையை தொடர அனுமதித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், சிவகங்கை மாவட்டம், அதிகரை ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துகிறது. எங்கள் வீட்டிற்கு தி.மு.க.,வினர் சிலர் வந்தனர்.

எங்கள் அனுமதி இன்றி, வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன், 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டினர்.

குடும்ப உறுப்பினர் களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்.

நீதிபதிகள் கேள்வி

தர மறுத்த போது, வீட்டு பெண்கள் மாதம்தோறும் அரசிடம் பெறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவதாக மிரட்டினர்.

மொபைல் போன் எண்களை கேட்டு வாங்குகின்றனர். எண் கொடுக்கப்பட்டதும், 'ஓரணியில் தமிழ்நாடு' என தகவல் வருகிறது.

தொடர்ந்து ஓ.டி.பி., வருகிறது. அதை தெரிவித்ததும், தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. அரசியல் பிரசாரத்திற்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறு.

இது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ., தலைமை செயல் அதிகாரி விசாரித்து, தி.மு.க., பொதுச்செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'ஓ.டி.பி.,எண்ணை வெளியில் பகிர வேண்டாமென போலீசார் அறிவிப்பு செய்கின்றனர். இச்சூழலில் எதற்காக ஓ.டி.பி.,யை கேட்கின்றனர்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், 'புகாருக்கு ஆதாரம் இல்லை. அரசியல் நாடகத்திற்காக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

தடையில்லை

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

'ஓரணியில் தமிழ்நாடு' பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களுக்கு ஓ.டி.பி., அனுப்ப இடைக்கால தடை விதிக்கப் படுகிறது. உறுப்பினர் சேர்க்கை நடத்த தடையில்லை.

டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், இந்திய தனித்துவ அடையாள ஆணைய தலைமை செயல் அதிகாரி, தமிழக தலைமை செயலர் இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர விட்டனர்.

Advertisement