மான்செஸ்டர் டெஸ்ட்... யாரு 'பெஸ்ட்' * இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் வலுவான கூட்டணியை கண்டறிந்தால், இந்தியா சிறப்பான வெற்றியை பெறலாம்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து, 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது. இதில், இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும்.
சுப்மன் ரன் மழை
பேட்டிங் பலமாக உள்ளது. அனுபவ ராகுல் (375 ரன்) வலுவான துவக்கம் தருகிறார். இளம் ஜெய்ஸ்வால் அவசரப்படக்கூடாது. கேப்டன் சுப்மன் கில் (607) நல்ல 'பார்மில்' உள்ளார். 'மிடில் ஆர்டரில்' கருண் நாயர் (0, 20, 31, 26, 40, 14) ஏமாற்றம் அளிக்கிறார். விரல் காயத்தில் இருந்து மீண்ட துணை கேப்டன் ரிஷாப் பன்ட், பேட்டிங் (425), கீப்பிங்கில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு அரைசதம் அடித்துள்ள 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா அணிக்கு பெரும் பலம். லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி வரை போராடிய இவர், இம்முறை வெற்றி தேடித் தரலாம்.
காயம் பலவீனம்
பந்துவீச்சில் 'வேகப்புயல்' பும்ரா, சிராஜ் மிரட்டலாம். ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமார் காயம் அடைந்தது பின்னடைவு. ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அல்லது புது வரவு அன்ஷுல் கம்போஜ் களமிறங்கலாம். நிதிஷ் குமார் இடத்தை பிடிக்க ஷர்துல் தாகூர் முயற்சிக்கலாம். 'ஸ்பின்னர்' பணிக்கு ஜடேஜா மட்டும் போதும் என்றால், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படுவார். சாய் சுதர்சன் மீண்டும் இடம் பிடிப்பார்.
ஸ்டோக்ஸ் பலம்
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அசத்துகிறார். கிராலே, டக்கெட், ரூட், போப், ஜேமி ஸ்மித் என பேட்டிங் படை நீள்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். கடந்த லார்ட்ஸ் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் ஜெய்ஸ்வால் விக்கெட்டை கைப்பற்றினார். காயம் அடைந்த 'ஸ்பின்னர்' சோயப் பஷிருக்கு பதில் லியாம் டாசன் களமிறங்க உள்ளார்.
இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,''முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்படும் போது சமாளிப்பது கடினம். நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் இடம் பெறாத நிலையில், எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமையான பவுலர்கள் உள்ளனர். மான்செஸ்டர் டெஸ்டில் ரிஷாப் பன்ட் இடம் பெறுவது உறுதி. வழக்கம் போல் கீப்பிங் செய்வார். அன்ஷுல் கம்போஜ் அருமையாக பந்துவீசுகிறார். அறிமுக வாய்ப்பை நெருங்குகிறார். பிரசித் கிருஷ்ணா, கம்போஜ் இடையே போட்டி காணப்படுகிறது. இவர்களில் இடம் பெறப் போவது யார் என்பது இன்று காலை தெரியும். கருண் நாயர் பேட்டிங்கில் எவ்வித பிரச்னையும் இல்லை. சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம்,''என்றார்.
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் கூறுகையில்,''முதல் 3 போட்டியும் கடைசி ஒரு மணி நேரம் வரை பரபரப்பாக நீடித்தது. லார்ட்சில் சிறந்த போட்டியை பார்த்ததாக ரசிகர்கள் வர்ணித்தனர். மான்செஸ்டரிலும் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்,''என்றார்.
தாமதம் சரியா
கடந்த லார்ட்ஸ் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இங்கிலாந்து துவக்க வீரர்கள் டக்கெட், கிராலே வேண்டுமென்றே தாமதமாக வந்தனர். இதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.
இது பற்றி சுப்மன் கூறுகையில்,'' அன்றைய நாள் ஆட்டம் முடிய 7 நிமிடம் மட்டுமே இருந்தது. இந்த சமயத்தில் குறைந்த ஓவரை சந்திக்க, தாமதம் செய்யும் யுக்தியை பெரும்பாலான அணிகள் கையாளும். வீரர்கள் காயம் அடைந்தால், 'பிசியோதெரபிஸ்ட்' வந்து சிகிச்சை அளிப்பார். இது நியாயமானது. ஆனால், இங்கிலாந்து வீரர்கள் 10, 20 அல்ல 90 வினாடிகள் வேண்டுமென்றே தாமதமாக 'கிரீசிற்கு' வந்தனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. விளையாட்டு உணர்வுக்கு எதிரானது.
கேப்டனாக உடல் அளவை காட்டிலும், மனதளவில் அதிகம் சோர்வு அடைகிறேன். போட்டிகளின் போது நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது. மான்செஸ்டர் ஆடுகளத்தை பார்த்தேன். பந்துகள் 'பவுன்ஸ்' ஆகலாம். பவுலர்களுக்கு சாதகமாக இருக்கலாம்,''என்றார்.

யார் ஆதிக்கம்
மான்செஸ்டரில் இரு அணிகளும் 9 டெஸ்டில் மோதின. இங்கிலாந்து 4ல் வென்றது. 5 போட்டி 'டிரா' ஆனது.
* போட்டி நடக்கும் 5 நாளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.
* ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால், முதல் நாளில் வேகப்பந்துவீச்சு எடுபடும். போகப் போக 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.

Advertisement