பணிமனையில் நின்ற அரசு பஸ் தீக்கிரை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்ட பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை - சென்னை சாலையில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தவிர, 20க்கும் மேற்பட்ட காலாவதியான பஸ்கள் உடைக்கும் பணிக்காக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 5:00 மணிக்கு, பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த பெங்களூரு செல்லும் அரசு பஸ், திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.

தீ, மள மளவென பரவி, பஸ் முழுதும் எரிந்தது. அங்கிருந்த ஊழியர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால், மற்ற பஸ்கள் தீ விபத்தில் இருந்து தப்பின. இச்சம்பவம் தொடர் பாக போக்கு வரத்து பணிமனை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் பேட்டரியில் இருந்து வரும் ஒயரில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

Advertisement