அனுமதியற்ற தங்கும் விடுதிகளுக்கு சீல்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதியற்ற தங்கும் விடுதிகளுக்கு கலெக்டர் சரவணன் அறிவுறுத்தலின்படி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்படும் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தங்கும் விடுதிகள் (ஹோம் ஸ்டே, காட்டேஜ், ரிசார்ட்) குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 180042 50150- க்கு காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை தொலைபேசி மூலமாகவும், 75985 78000 வாட்ஸ் ஆப் எண்ணில் போட்டோ, வீடியோ மூலமாகவும் இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டது.


இதையடுத்து தொடர்ந்து வந்த புகாரின்படி நேற்று கொடைக்கானல் தாசில்தார் பாபு தலைமையில் இரு காட்டேஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டது.




ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு கூறுகையில்,''உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மலைப்பகுதி முழுமையும் 600 க்கு மேற்பட்ட தங்கும் விடுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற காட்டேஜ்கள் சீல் வைக்கப்படும்,'' என்றார்.

Advertisement