காயம்பட்ட புறாவுக்கு சிகிச்சை; காப்பாற்ற துடித்த சிறுவன் வீடியோ வைரல்

1

புதுடில்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காயம்பட்ட புறாவைக் காப்பாற்ற கண்ணீருடன் முயற்சித்த சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விலங்குகள், பறவைகள் மீது குழந்தைகள் ஆழ்ந்த பாசம் இருப்பது வாடிக்கை தான். சின்னஞ்சிறு குழந்தைகளின் உலகில், வேறு எந்த ஒன்றையும் விட, அவர்கள் மீது பேரன்பு காட்டும் பறவைகளும், விலங்குகளுக்கும் மிகப்பெரிய இடம் உண்டு. அப்படி ஒரு நிகழ்வில், புறாவுக்காக பேரன்பு காட்டிய அருணாச்சல் சிறுவனின் கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளத.

அருணாச்சலப் பிரதேசத்தில், சாலையில் சிறகுகள் ஒடிந்து காயமடைந்த புறாவை, 7 வயது சிறுவன், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, லாங்டிங்கில் உள்ள ஒரு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறான். அங்கு அவன், 'புறாவின் சிறகுகள் உடைந்துவிட்டது. சிகிச்சை அளியுங்கள்' என்று கண்ணீருடன் வேண்டுகோள் வைக்கிறான்.
அங்குள்ள ஒரு பெண் ஊழியர், 'தயவுசெய்து புறாவை இங்கே வை. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்கிறார். அந்த சிறுவன், தான் வைத்திருந்த புறாவை, மெதுவாக அங்கே இருந்த மேசையின் மீது வைத்தான். புறா, பெஞ்சில் சாய்ந்து விடுகிறது. அதை நிமிர்த்து உட்கார வைத்து தடவிக் கொடுக்கிறான் சிறுவன்.

அருகில் நின்று கொண்டு கண்ணீரை துடைத்துக்கொண்டே இருக்கிறான் சிறுவன். மருத்துவமனை ஊழியர்களிடம், 'அது இறந்து போகுமா' என்று அழுதபடியே கேட்கிறான். அதற்கு ஊழியர், 'ஆம் இறந்துவிட்டது' என்று பதிலளிக்க, அப்பாவி சிறுவன் தனது துக்கத்தை அடக்க முடியாமல் கதறுகிறான். அந்த காட்சிகள், அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவரால் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், அந்த சிறுவனின் கருணை உள்ளத்தை பாராட்டி வருகின்றனர்.
நெட்டிசன்கள் கூறுகையில்,' ஒவ்வொரு பெற்றோரும், உயிரினங்களிடம் கருணையுடன் இருக்கும் வகையில் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும், அந்த வகையில் இந்தக் குழந்தை பெற்றோரால் மிகச் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டுள்ளான்' என்று பாராட்டி வருகின்றனர்.

Advertisement