ஸ்ரீவில்லிபுத்துாரில் நாளை தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நாளை (ஜூலை 28)காலை 9:10 மணிக்கு நடக்கிறது. இதனை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஜூலை 20 அன்று கொடியேற்றத்துடன் ஆடிப்பூரத் திருவிழா துவங்கியது. ஜூலை 24 அன்று காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை (ஜூலை 28) நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்குமேல் தேருக்கு எழுந்தருளும் ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் காலை 9:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறநிலையத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு நாளை அதிகாலை முதல் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராஜபாளையத்திலிருந்து மதுரை செல்லும் வாகனங்கள் புதுப்பட்டி, மம்சாபுரம், கம்மாபட்டி, ஆத்துகடை, ராமகிருஷ்ணாபுரம் வழியாக செல்ல வேண்டும்.

மதுரை வழித்தடத்தில் வரும் பஸ்கள் மட்டும் நகருக்குள் வழக்கம்போல் சர்ச் சந்திப்பு வரை வந்து நீதிமன்றம், ரயில்வே ஸ்டேஷன், தாலுகா ஆபிஸ், திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையம் செல்ல வேண்டும். மற்ற வாகனங்கள் கிருஷ்ணன் கோவிலில் இருந்து நான்கு வழி சாலை வழியாக புது பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், ரயில்வே ஸ்டேஷன், தாலுகா ஆபிஸ், திருப்பாற்கடல் வழியாக செல்ல வேண்டும்.

சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் பஸ்கள் வழக்கம் போல் வரலாம். ஆனால், ராஜபாளையம் செல்லும் பஸ்கள் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, தாலுகா அலுவலகம், திருப்பாற்கடல், மடவார் வளாகம் வழியாக செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement