காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு

3


கின்ஷாசா: காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் கொமாண்டா நகரில் சர்ச் ஒன்று உள்ளது. இன்று சர்ச்சில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இதையடுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும் பயங்கரவாதிகள், குறிவைத்து சரமாரியாக சுட்டனர். மேலும், சர்ச்சிற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த கொடூர சம்பவத்தில், மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Advertisement