'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து

4


சென்னை, விமானத்தின் 'எமர்ஜன்சி' எனும் அவசர கால கதவை திறக்க முயன்ற மாணவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.


மேற்கு வங்க மாநிலம், துர்காப்பூர் செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புறப்பட தயாரானது. இதில் பயணம் செய்ய 164 பேர் இருந்தனர்.

விமானம் குறித்த நேரத்தில் ஓடுபாதையில் ஓட துவங்கியபோது, விமானியின் 'காக்பிட்' பகுதியில், அவசர கால கதவு திறப்பதற்கான எச்சரிக்கை அலாரம் அடித்தது.
இதை பார்த்து சுதாரித்த விமானி, விமான பணிப்பெண்களுடன் இது குறித்து கேட்டார்; விமானத்தையும் ஓடு பாதையில் அவசரமாக நிறுத்தினார்.



அவசர கால கதவு பக்கத்தில் அமர்ந்திருந்த, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த சர்க்கார், 27, என்பவரிடம் விசாரித்தனர். சென்னை ஐ.ஐ.டி.,யில் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவரான அவர், கவனக்குறைவாக அவசர கால கதவு 'பட்டனை' அழுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.


எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமானி, அவரது பயணத்தை ரத்து செய்து, சென்னை விமான நிலைய போலீசில் மாணவரை ஒப்படைத்தனர். பின், ஒரு மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து துர்காப்பூருக்கு, விமானம் புறப்பட்டு சென்றது.


விமானத்தில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விமான பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


@block_P@

பயணிக்கு நெஞ்சு வலி

சென்னையில் இருந்து கொல்கட்டா செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று பிற்பகல் 3:05 மணிக்கு புறப்பட தயாரானது. இதில், 168 பயணியர் இருந்தனர். விமானம் 'ரன்வே'யில் வந்து ஓடத் துவங்கியபோது, ஆண் பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஓடு பாதையில் அவசரமாக விமானம் நிறுத்தப்பட்டது.


பின், இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, விமான நிறுத்தும் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. அங்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், பயணியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பின், மற்ற பயணியருடன் விமானம் தாமதமாக மாலை 4:20 மணிக்கு கொல்கட்டா புறப்பட்டு சென்றது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.block_P

Advertisement