ஹிமாச்சலில் மேக வெடிப்பு; கனமழைக்கு 3 பேர் உயிரிழப்பு

1

சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில், மேக வெடிப்பால் கொட்டி தீர்த்த கனமழையில் சிக்கி, மூன்று பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன.



ஹிமாச்சலில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, மேக வெடிப்பால் திடீரென பலத்த மழை கொட்டியது.



இதனால், ஜெயில் சாலை, சைனி மொஹல்லா, மண்டல மருத்துவமனை  உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.



மழை, வெள்ளத்தோடு குப்பைக் கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.



முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.



மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், மூன்று பேர் உயிரிழந்தனர். காணாமல் போன பெண் ஒருவரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணில் புதையுண்டன.

மண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இதுவரை, 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement