'மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள்' : எதிர்க்கட்சிகளுக்கு நட்டா அறிவுரை

9

புதுடில்லி: '' கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள், தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும், '' என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.


ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் ராஜ்யசபாவில் நட்டா பேசியதாவது: எதிர்க்கட்சிகள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். 2005 டில்லி தொடர் குண்டுவெடிப்பு, 2006 வாரணாசி பயங்கரவாத தாக்குதல், 2006 மும்பை உள்ளூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு அப்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தகம், , பயங்கரவாதம், சுற்றுலா தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.


2008 ஜெய்ப்பூரில் இந்தியன் முஜாகிதீன் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசின் திருப்திபடுத்தும் அரசியலின் எல்லையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


தற்போதுள்ள போலீஸ், ராணுவம் தான் அப்போதும் இருந்தது. ஆனால், அரசியல் உறுதி இல்லை. 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 2009ல் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் எந்த குறிப்பும் இல்லை.


முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசும் போது, '' எல்லைப்பகுதியை மேம்படுத்தக்கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. வளர்ச்சி பெறாத எல்லைப்பகுதி தான், வளர்ச்சியடைந்த எல்லையை விட சிறந்தது, '' எனக்குறிப்பிட்டார்.


அதேபோல் முன்னாள் உள்துறை அமைச்சர், ' எனக்கு காஷ்மீர் போகவே பயமாக இருக்கிறது,' என்றார். நாம் இந்த நாட்டில் இருளில் வாழ்ந்தோம். 2014 - 2025ல் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது.


பிரதமர், ' உரி தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்களை தப்ப விட மாட்டோம்,' எனத் தெரிவித்தார். அடுத்த 3 நாட்களுக்குள், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாதிகளின் பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டன. இது தான் மாற்றமடையும் இந்தியா. என்ன செய்வது பார்ப்போம் எனக்கூறியவர்களுடன் ஒப்பிட்டு, தற்போதைய அரசியல் உறுதியை பாருங்கள். இவ்வாறு நட்டா பேசினார்.

Advertisement