'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரியிடம் வாக்குவாதம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மனு வாங்க மறுத்த அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணநல்லுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், கல்வி குழு உறுப்பினர் பாஸ்கர், நாட்டார்மங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் சுதா மணிரத்தினம் முன்னிலை வகித்தனர்.

பழஞ்சநல்லுார், நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து கிராம மக்கள் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

இந்நிலையில், மதியம் 3:00 மணிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முகமது அசேன், மனுக்களை வாங்க மறுப்பதாக கூறி அவரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

அருகில் இருந்த அதிகாரிகள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, மக்கள் மனு அளித்து சென்றனர்.

Advertisement