விழுப்புரம் -புதுச்சேரி ரயில் பாதையில் கேட் பகுதியில் தடுப்புகள் அமைப்பு

விழுப்புரம் : விழுப்புரம் - புதுச்சேரி ரயில்வே மார்க்கத்தில், கேட்டுகள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு கருதி, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் - புதுச்சேரி ரயில்வே மார்க்கத்தில், 24க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில்வே கேட்டுகள் அமைந்துள்ளது. சமீபத்தில், கடலுார் அருகே பள்ளி வாகனம் மீது, ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, தெற்கு மாவட்ட ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட்டுகளில் பல்வேறு பாதுகாப்பு யுக்திகள் மேற்கொண்டு வருகிறது. கேட் கீப்பர்களின் பணிகளையும் தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

இந்த சூழலில், புதுச்சேரி மார்க்கங்களில் உள்ள ரயில்வே கேட்களுக்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் தடுப்புகள் இல்லாததால் பலர் கடந்து செல்வதும், தண்டவாளம் மீது நடந்து செல்வதும், கால்நடைகள் கடப்பதால், ரயில் வேகமாக வருவது தெரியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், ரயில்வே கேட்டில் இருந்து இருபுறங்களிலும் சுமார் 1 கி.மீ., துாரம் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement