ஓட்டு கணக்கு ஆரம்பமா? தி.மு.க. அமைச்சரின் பரிசுப்பொருள் விநியோகம் சமூக வலைதளங்களில் வைரல்

2

தஞ்சாவூர்: வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., “மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்” என்ற பயணத்தைத் தொடங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

தி.மு.க., “ஒரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தை தொடங்கி, வார்டு வார்டாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இடையில், தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வாட்ச், குடை, மொபைல், பேனா என கிப்ட் பொருள்களை வழங்கி உள்ளனர்.



இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் செழியனின் படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் ட்ரம் மற்றும் சேலை ஆகியவை, திருவிடைமருதூர் தொகுதியில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றன.


இது தொடர்பாக, அ.தி.மு.க., த.வெ.க., கட்சியினர், சமூக வலைதளங்களில், “2026 தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களை கவரும் நோக்கில் தி.மு.க. முயற்சி மேற்கொள்கிறது. அமைச்சராகிய செழியன் இதுபோன்ற விநியோக நடவடிக்கைகளை விட்டு விட்டு, நெசவுத் தொழிலாளர்களுக்கான நிலையான வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.


தேர்தலில் தோல்வியடையப் போவதற்கான பயத்தில் இந்த நடவடிக்கையைத் துவங்கியுள்ளார்” என விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அமைச்சர் செழியனின் படத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டிய சில்வர் ட்ரம் மற்றும் சேலை வழங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Advertisement