இங்கிலாந்துக்கு 373 ரன்கள் இலக்கு; ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அபாரம்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 373 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் குவித்தன. நேற்று 2ம் ஆட்டத்தில் 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்திய அணி நேற்று தொடங்கியது. கே.எல்.ராகுல் (7), சாய் சுதர்சன் (11) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இதனால், நேற்று நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறக்கப்பட்டார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் (51), ஆகாஷ் தீப் (4) களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில், 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ஆகாஷ் தீப், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் சேர்ந்து 100 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஆகாஷ் தீப் 66 ரன்களில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி விளையாடி வருகிறது. உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.


அதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கில் (11), கருண் நாயர் (17) ஏமாற்றம் அளித்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் (118) சதம் அடித்தார். சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும், இந்தப் போட்டியிலும் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜடேஜா 53 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 39 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார்.


இறுதியில் இந்திய அணி 396 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம், 373 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும், 2 நாட்கள் மீதமுள்ளதால், இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்புள்ளது.

Advertisement