உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரூர், சாகுபடி நிலங்களில் அமைக்கப்படும், உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கூடுதல் இழப்பீடை உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கிருஷ்ணராயபுரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாயனுார் கதவணைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைத்திட தமிழக அரசும், நீர்வளத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

க.பரமத்தி, கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், சாகுபடி நிலங்களில் அமைக்கப்படும் உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கூடுதல் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். இதன்மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட செயலர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாகிகள் நாகராஜன், முனியப்பன், இளங்கோவன், ரவிக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement