2 மணி நேரத்தில் 85 மி.மீ., விழுப்புரத்தில் கனமழை

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. நள்ளிரவு, 1:00 மணிக்கு காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இரண்டு மணி நேரம் பெய்த மழையால், நகரில் பல இடங்களில் மழை நீர் குளமாக தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

இந்திராநகர் ரயில்வே தரைப்பாலத்தில், மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை நெடுஞ்சாலை உட்பட தாழ்வான பல இடங்களிலும், மழை நீர் குளம் போல் தேங்கியது.

பஸ் நிலையம், ரயில்வே தரைப்பாலத்தில், மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து அகற்றப்பட்டது. மழை நீர் பல இடங்களில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மாவட்டம் முழுதும் மழை பரவலாக பெய்தது, கடும் வெயில் தாக்கத்திற்கு ஆறுதலாக அமைந்தது.

Advertisement