கொட்டகை அமைத்து வியாபாரம் 'பலே' ஆடு திருடர்கள் மூவர் கைது

ஆவடி:ஆவடி பகுதியில் ஆடு திருடி, நெற்குன்றத்தில் உள்ள கொட்டகையில் வியாபாரம் செய்த, 'பலே' திருடர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்; 20 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவடி முத்தா புதுப்பேட்டை, பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள், தொடர்ந்து திருடு போயின. இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த குமார், 26, என்பவர், கடந்த 28ம் தேதி, வீட்டின் வெளியே கட்டப்பட்டு இருந்த, இவரது நான்கு வெள்ளாடுகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து, ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.

ஆவடி முதல் கோயம்பேடு வரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில், ஆடு திருட்டில் ஈடுபட்டது நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாபு, 25, விமல்ராஜ், 23 மற்றும் ராஜகோபால், 45, என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஆவடி முத்தா புதுப்பேட்டை, பட்டாபிராம், திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஆடுகளை, இவர்கள் திருடியது தெரிந்தது.

திருடி செல்லும் ஆடுகளை, நெற்குன்றம் பகுதியில் அமைத்துள்ள கொட்டகையில் வளர்த்துவது போல நாடகமாடி கறிக்கு விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து, நெற்குன்றம் பகுதியில் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 20 ஆடுகளை, போலீசார் மீட்டனர். ஆடு திருட பயன்படுத்திய பஜாஜ் என்.எஸ் பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், மூவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement