ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம்

14

அமராவதி : ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. இதில் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடந்த ஊழல் புகார் தொடர்பாக நடந்த ரெய்டில் திரைப்பட துறையை சார்ந்த சிலரும் சிக்கினர். இதேப்போன்ற சம்பவம் தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடந்துள்ளது. ஆந்திராவில் 2019 முதல் 2024 வரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சி நடந்தது. அப்போது, மதுபான விற்பனையில், 3,500 கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்து எப்ஐஆர் வழக்கு போட்டது யார் என்றால் நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ். இவரோடு முகேஷ் குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இந்த குழுவில் உள்ளனர்.

Latest Tamil News

சில மாதங்களாக தீவிரமாக விசாரித்த அதிகாரிகள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் கைதானவர்களில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு ஆகியோர் முக்கியமானவர்கள். சமீபத்தில் வெங்கடேஷ் நாயுடு கட்டு கட்டாக பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வீடியோ வெளியானது.

இந்நிலையில் இந்த ஊழல் மோசடி வளையத்தில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. மோசடி பணத்தின் மூலம் நடிகை தமன்னா நடத்தி வரும் ‛ஒயிட் அண்ட் கோல்டு' கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல் வெங்கடேஷ் நாயுடு உடன் தனி விமானத்தில் நடிகை தமன்னா சென்ற போட்டோக்கள், அவருடன் இருக்கும் போட்டோக்கள் வைரலாகின. இதனால் இந்த மோசடியில் நடிகை தமன்னாவிற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பல அரசியல் பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் மற்றும் திரைப்பிரபலங்களும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

Advertisement