குற்றவாளிகளுடன் தொடர்பு: இன்ஸ்., மீது நடவடிக்கை

திருச்சி: குற்றவாளிகளுடன் தொடர்பு, லஞ்சம் உட்பட பல்வேறு புகார்கள் காரணமாக, மணப்பாறை இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை இன்ஸ்பெக்டராக, சில மாதங்களுக்கு முன் சீனிபாபு பொறுப்பேற்றார். இவர், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் கைகோர்த்து செயல்பட்டுள்ளார். வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுடன் நெருங்கி பழகி, அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.

அண்மையில், பா.ஜ., பிரமுகர் பாண்டியன் தற்கொலை வழக்கில், மணப்பாறையை சேர்ந்த டாக்டர், பள்ளி நிர்வாகிகளின் பெயரை, அவரது மனைவி புகாரில் எழுதிக் கொடுத்தும், அவர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை. இதற்காக, சீனிபாபு பெருமளவு பலனடைந்துள்ளார். கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, சட்டவிரோத மதுபான விற்பனைக்கு துணைபோய், மாமூல் பெற்று வந்துள்ளார்.

திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமாருக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு, புகாரில் உண்மை இருந்ததால், சீனிபாபுவை நேற்று முன்தினம் இரவு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

Advertisement