சென்னிமலையில் கழிவுஆடி உற்சாக கொண்டாட்டம்

சென்னிமலை, சென்னிமலை பகுதியில் நெசவு, சாயப்பட்டறைகள் அதிகம் உள்ளன. பட்டறைகளில், ஆடி மாத கடைசி புதன் கிழமை அன்று, கழிவு ஆடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் படி, ஆடி கடைசி புதன் கிழமையான நேற்று, சென்னிமலை பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளை, தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். வர்ணம் பூசி, பொங்கல் வைத்து, கிடாவெட்டி, கிட்டி மரத்திற்கு பூ, பொட்டு வைத்து சாமி கும்பிட்டனர். பின்பு மதியம் கிடாய் கறி விருந்து வைத்து தொழிலாளர்களும், முதலாளிகளும் உண்டு மகிழ்ந்தனர்.

கழிவு ஆடித் திருவிழாவை முன்னிட்டு, இப்பகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டு
தோறும் ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டப்படும். ஆனால் இந்த ஆண்டு, 100க்கும் குறைவான கிடாய்களே வெட்டப்பட்டன.
தற்போது சாயப்பட்டறைகள் குறைந்து, பனியன் வேஸ்ட் பஞ்சில் உற்பத்தியாகும் கலர் நுால் கோன் பெருகி விட்ட நிலையில், கழிவு ஆடி திருவிழா கொண்டாட்டத்தை குறைத்து விட்டதாக, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement