தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்

12

சென்னை: '' நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை நேற்று நள்ளிரவு போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு தூய்மைப் பணியாளர்களுக்காக தமிழக அரசு 6 சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

சுயதொழில் உதவி

நல்வாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!

இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு! இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement