பஞ்சாப்பில் பயங்கரவாத சதிச் செயல் முறியடிப்பு; பாக்., பயங்கரவாதிகள் இருவர் கைது

பஞ்சாப்: பஞ்சாப்பில் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், பஞ்சாப்பில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த பப்பர் கல்சா சர்வதேச பயங்கரவாத அமைப்பில் தொடர்புடைய ஹர்ப்ரீத் சிங், குல்சன் ஷாங் ஆகிய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.

கிரானைட் வெடிகுண்டுகளை வைத்து அரசு அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீஸ் இயக்குநர் கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களிடம் இருந்து, இவர்களிடமிருந்து 2 கையெறி குண்டுகள், ஒரு 9மிமீ துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் இயக்குநர் கவுரவ் யாதவ் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் உத்தரவின்படி செயல்படுகின்றனர். அரசு கட்டடங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்கள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தி, அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டனர்," எனக் கூறினார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பப்பர் கல்சா சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement