தமிழகத்தில் நேர்மையான அதிகாரிக்கு கிடைக்கும் பரிசு; பெண் விஏஓ மீதான தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முயன்ற நாமக்கல் கிராம நிர்வாக பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாமக்கல்லில் கிராம நிர்வாக அதிகாரி மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனது அதிகார வரம்பிற்குள் நடந்து வந்த சட்டவிரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்தியதே அவர் செய்த ஒரே குற்றம். இன்றைய தமிழகத்தில் ஒரு நேர்மையான அதிகாரிக்கு கிடைக்கும் கொடுமையான பரிசு இதுதான்.


இது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல. ஒவ்வொரு முறையும், மணல் மாபியா, போதைப்பொருள் மாபியா, நிலக் கொள்ளையர்களுக்கு எதிராக பேச துணிந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை வன்முறை மூலம் அமைதியாக்குகின்றனர்.

திமுக ஆட்சியில், எதுவும் சட்டபூர்வமாக இல்லை. எதுவும் பாதுகாப்பானதல்ல. எந்த நேர்மையான அதிகாரிக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டமின்மை ஆட்சியாக மாறிவிட்டது, குண்டர்கள் இயல்பாக சுற்றிதிரிகின்றனர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement