அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

10

புதுடில்லி: அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.



ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.


'ஏவுகணை சோதனை அனைத்து வகையிலும் வெற்றிகரமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அளவீடுகள் சிறப்பாக இருந்தன. ஸ்ட்ராட்டிஜிக் போர்சஸ் கமாண்ட் எனப்படும் ராஜதந்திர படைத்தலைமை மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டதாக' மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இது, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளை கொண்டது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணை மணிக்கு 29 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

Advertisement